கடற்கரை ஓரம் காதல் பண்பாடு - கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல் - ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்கவேண்டிய பாடல் .
கடற்கரை மணலில் தோழியருடன் விளையாடும்போது, மணலுக்குள் புன்னங்கொட்டையை மறைத்து விளையாடினோம். அதனை எடுக்காமல் மறந்து சென்றுவிட்டோம். அது முளைத்துக்கொண்டது. அதற்குப் பாலை ஊற்றி வளர்த்துவந்தேன். இப்போது அது மரமாக நிற்கிறது. அது உனக்கு நுவ்வை (உனக்கு தங்கையானவள் ) ஆகும் என்று அம்மா சொல்லிவிட்டாள்.
அதன் கீழே நீ சிரித்துக்கொண்டு காமச்சேட்டை செய்து விளையாடுவது எனக்கு வெட்கமாக இருக்கிறது. புன்னை மரம் என் தங்கையையொத்தது. அதுபார்க்க அதன் கீழே அமர்ந்து உன்னோடு எப்படி காதல் உறவாட முடியும்? நீ என்னுடன் காதல் சேட்டை செய்து விளையாடுவதாகில், வேறு நிறைய மர நிழல்கள் உண்டு அங்கே செல்லலாமே .. .
ஆயம் = தோழியர் கூட்டம்
காழ் = புன்னங்கொட்டை
முளை = முளைத்து
அகைய = வளர
நெய் பெய் தீம்பால் = பசு பெய்த இனிய பால்
நுவ்வை = தங்கை
இலங்கு நீர்த்துறை கெழு கொண்க = நீர்நிலை பொருந்திய நெய்தல் நிலத்தலைவன்
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப = விருந்தில் இசைஞர்கள் மெல்லிய இசை இசைக்க
வலம்புரி வான் கோடு நரலும் = வலம்புரிச் சங்கின் ஒலியும்
பாடல் – நெய்தல் நிலம் - நற்றிணை 172
"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"