திங்கள், 1 டிசம்பர், 2014

பாலகத்து  மூச்சை  பனிக்கக்  கண்டாய் 
நான் பாதையில்  ஓடிய  அழகுகண்டாய்
நாலரை மணி விடியலிலே மெலிதாய் 
குளிர்ந்து பேருந்துக்காய்  காத்தது கண்டாய் 
 
 
படு பாதகத்து   பாரதப் பட்டாளம் 
சிங்கத்து செறுநர் வந்திருந்து
வதைகள் பல செய்த போதிலும் 
வணங்காமுடியாய்  வானம் நோக்கி
 உயர்ந்து  நிற்கும்  வடிவான  மரமே
 நீ  மானமுள்ளவன் .


எத்தனை ஆண்டுகள்  சென்ற போதிலும்
உன்னை கண்டவரெல்லாம்  மாண்ட போதிலும்
சுந்தர வடிவாய்  சுழலும்  சுடரே 
நின் வாழ்நாள்  நீண்டு  வளரட்டும்.


 
எண்ணிலடங்கா  உணர்வுகளுக்குள்
நின்   இன்ப துன்ப வேளைகளும்   அடக்கம்
கண்ணில்லா  மனிதர்கள் கொண்ட
கோலங்களுக்கு நீயே சாட்சி
உனக்கு மட்டும் வாயிருந்தால்
உலகத்து   ஊடகங்கள்
உன் பக்கம் வந்திருக்கும்.


பேயோ  இல்லை பிசாசோ
என்று நீ எண்ணியிருப்பாய்
இந்தியத்தின்  ஈனப்பட்டாளம் கண்டு
உன்னருகில்த்தானாமே  அந்த
நாகங்கள்  குடியிருந்தன  கொஞ்சக்காலம்
கொடுமைகளின்  சீற்றம்  உன்னை
அசைக்கவில்லை - நீ வாழ்க வாழ்க .

ம,இரமேசு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக