சனி, 3 மே, 2014

கூவாத குயில்கள் 

ஈழமண்ணில் வாழும் தமிழர்களை கூவாத குயில்களாக கூட்டுக்குள் அடைத்து வைத்து வேண்டிய பொழுதுகளில் அவர்கள் குரல்வளையை அறுத்தும் 
தங்கள் பசிக்கு இரையாக்கியும் சின்னாபின்னமாக்கியே சிங்கள மக்களரசு முனைப்புடன் பல்லாண்டு செயல்ப்பட்டது இன்றும் அவ்வண்ணமே
நடந்து கொள்கின்றது என்பதற்கு அண்மையில் நெடுந்தீவு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையினை வைத்து அறிந்து கொள்ளலாம், நாட்டுக்குள் இருங்கள்
நமக்கு அடிமையாய் செயல்ப்படுங்கள் இதுவே நமது நீதி என்று புத்தரின் பாதை செல்வதாக கூறுவோர் கூறும் சனநாயக தர்மம் சிங்களத்து மேலிடங்கள் சொல்லும் புதிய வேதம் மண்டியிட்டு மங்களம் பாடுவோருக்கு ஏற்புடைத்தாயினும் தன்மானம் சூடு சுரணை உள்ளவர்களுக்கு அடிபணிந்து வாழ விரும்பாதோருக்கு பாகற்காய் போன்றதே,மானம் ரோசம் என்று பேசினால் மரணமே பரிசாக வரும் அதிகார மேலிடத்தால்,செய்வதறியாது செயலிழந்து
அதிகார மேலிடத்தின் விருப்புக்கு பலியாகி வாழுங்கள் ஒரே கூட்டுக்குள் என்று ஈழத்தமிழ் இனத்தை மீண்டும் மீண்டும் அமிழ்த்தினால் அவர்களால் எப்படி கூவ முடியும் நீலம் கொண்ட நாகம்பக்கத்தில் நின்றுகொண்டு என்பதனை உலக வழிநடத்துனர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆங்காங்கே
வாழும் மற்றைய தேசத்தினர்கள் தங்கள் உரிமைகளை முழுவதும் பெற்று அச்சமின்றி தமது பிறந்த முற்றங்களில் வாழும்பொழுது ஈழத்து முற்றத்தில் பிறந்தவர்கள் எந்நேரம் சிங்களவர்கள் படைகள் வருமோ நம் செல்வங்களை கவர்ந்து செல்லுமோ என்று அஞ்சி அஞ்சி வாழவேண்டுமா ? கடைக்கு போனவன்,
உடைதைக்க சென்றவர், தண்ணியள்ள சென்றவள், சுள்ளி பொறுக்க போனவள்,பாடசாலைக்கு சென்றவள் - சென்றவன்,வேலைக்குபோனவர்,மாயம், மரணம்,
கடத்தல்,பலாத்தகாரம், என்ற செய்திகள் வருங்காலத்திலும் தமிழர்கள் காதுகளுக்குள் கலக்கவேண்டுமா இதுவரை கலந்தது போதாதா? படித்தோரே,பண்பாளர்களே,அறிவியல்பெருமக்களே,யாராவது எமக்கு உலகநீதி பாதுகாப்பு அச்சமில்லா வாழ்வு பெற்றுத்தர முன்வருவீர்களா நமது உரிமைகள் நம்மால் கேட்கப்பட்டதை தப்பு சொன்னவர்கள் அவர்கள் பாதையில் நமக்கான நீதியினை பெற்றுத்தரவேண்டும் ,ஆனையின் தோல் கறுப்பு
என்றோம் இல்லை சிவப்பு என்றவர்களே நஞ்சின் நிறமான நீலம் போற்றுவோரிடம் நெஞ்சம் இருக்கின்றது என்று இன்னும் நீங்கள் நம்பலாமா?
அல்லது எல்லோரும் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களுக்கு நாடகம் நடித்து காட்டுகின்றீர்களா என்று கேட்க வேண்டியுள்ளது சில நடவடிக்கைகள் கண்டு
தனியொரு மாது தயக்கமின்றி சபையேறி நீதி கேட்க்க வழிசமைத்த ஆட்சிச் சிறப்பும் நீதியும் கொண்ட பாரம் பரியம் மிக்கவர்களுக்கு அரசியல் புகட்ட
முனைவது நம் வரலாறு அறியா அறியாமை என்பதனை நினைவூட்ட விரும்புகின்றேன். காலத்தால் தமிழினம் நலிந்திருந்தாலும் நமது கீர்த்தி பெரியது எந்நாளும் நலிவடையாது என்பதனை அனைவரும் மனதில் கொள்ளுதல் வேண்டும்.நமது குலத்தில் தோன்றிய உளுத்தர்களினால் ஓரம் கட்டப்பட்டோமே தவிர ஓரத்தில் நிற்பதனை ஒருபொழுதும் வரவேற்பதில்லை நம்மினம்.

தாகம் எடுத்தவன் தண்ணீர் குடித்தல் தப்பா ? அது தமிழன் என்றால் தப்பு என்கிறது
செங்காவித் துற(பா )விகள் ,நல்லொழுக்க வழிவந்த துறவி நாசம் செய்கின்றான் பெண்ணை ,தமிழர்களை கொலைசெய்தல் பாபம் அல்ல என்று புத்தனின் கருணை வழி செல்வதாக கூறும் சிங்களத்து செங்காவி கூறியிருந்தானே தமிழனொருவன் படகை ஓட்டிசெல்ல தாமதித்தமைக்காக வெகுண்டானே பொறுமை காக்கவேண்டிய செங்காவித்துறவி எங்கும் எப்பொழுதும் தமிழர்களுக்கு நெருக்குதலும் அச்சமூட்டலும் அவமானமும் பாதுகாப்பின்மையுமே
மிகுதியாக நிரம்பியிருக்கும் நாட்டில் தமிழர்கள் இயல்பாக கூவமுடியாத குயில்களாகவே வாழும் நிலையில் அந்நாட்டுக்கு அடியெடுத்து வைப்பது ஆபத்து
என்பதனை அனைத்து உறவுகளும் உணர்ந்துகொள்ளுதல்வேண்டும் பணம் இருப்பதனால் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் காட்டி வர விரும்புவோர்களே
உங்களை வீட்டுக்குள் வந்து அடிக்கவும் அணைக்கவும் சுடவும் கடத்தவும் ஆயுதமேந்தியவர்களுக்கு தகுந்த சுதந்திரமுண்டு ஆள்புலத்தினரால் என்பதனை
நினைவில் கொள்ளுதல் நல்லது தன்மானத்துக்கும் மனித உரிமைக்கும் மதிப்பில்லா ஆள்புலத்துக்குள் நுழைவது புத்தி சாலித்தனம் இல்லை மடியில் கை
வைத்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொள்ளுங்கள் உங்களையே நல்ல பதில் கிடைக்கும் உங்களால் உங்களுக்கு .அவுஸ்ரேலியாவுக்கு
கப்பலில் சென்ற சிறுமி இந்தோனேசியாவில் பிடிபட்டு நிற்கையில் சொன்னாரே எங்களை எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் அனுப்புங்கள் ஆனால் சிறிலங்காவுக்கு வேண்டாம் என்றதை இலகுவாக மறந்துவிடமுடியாது.உயிரின் வலி என்ன என்பதனை நன்கு புரிந்த மக்கள் போகமாட்டார்கள் புல்லர்கள்
தேசத்துக்கு பூனைக்கு இருக்கும் அறிவு சமயத்தில் நமக்கும் வேண்டும்.அங்கு இல்லாமல் தவிப்போருக்கு உதவி செய்வதே மனதுக்கு இதம் தரும் என்ற
உண்மையினை அனைவரும் புரிந்துகொண்டால் உங்கள் நெஞ்சுக்கு உண்மையான இன்பம் வரும்.

கைகூவியோன்
ம.இரமேசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக