செவ்வாய், 8 ஏப்ரல், 2014

25 வருடங்கள் டென்மார்க்கில் சிரித்ததும் அழுததும் சிந்திக்க வேண்டியதும்

June 7, 2012

.
.
.
.
.
.
இலங்கையில் மேற்கொண்டு பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வு இல்லை என்று உணர்ந்து தமிழர்கள் பல்வேறு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள் இன்றும் இடம்பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
டென்மார்க்கில் பெரும்பான்மையான தமிழர்கள் குடியேறி 25 வருடங்கள் நிறைவுகண்டுள்ள நிலையில் நாங்கள் எப்படி வாழ்ந்து வந்தோம் எப்படி வாழவேண்டும் என்று பார்க்கும் தருணமிது.
நாம் இங்கு வருமுன்னர் துருக்கியரே அந்நிய இனமாக இங்கு வாழ்ந்து வந்தார்கள்.
நாம் இங்கு வரும் போது எங்களுடன் ஈரானியர்களே வந்தவர்கள்.
இன்று எமது தமிழ்மக்களே மற்றைய இனத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அனைத்து வழிகளிலும் முன்னேறியிருக்கின்றார்கள்.
கல்வியிலும் வியாபாரங்களிலும் பொருளாதாரத்திலும் நமது தமிழர்கள் பெருவளர்ச்சியினை கண்டுள்ளது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை சேர்க்கின்றது.
பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதிலும் அவர்கள் அம்மா அப்பா பேச்சு கேட்டு நடக்கும் விதத்திலும் கலை கலாச்சாரங்கள் பண்பாடுகளை பேணிப்பாதுகாப்பதிலும் நம்மவர்கள் யாருக்கும் குறையவில்லை,
சிலர் கண்மூடித்தனமாக சரியாக சிந்தியாது முன்பு வாழ்ந்திருந்தாலும் இன்று சிந்தித்து நல்வழி செல்லுவது பெரிதும் மகிழத்தக்கதே.
நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருதல் இனிமையாகப் பேசுதல் உபசரித்தல் இன்முகம் காட்டுதல் மெருகேறிக்கொண்டே வருகின்றது.
ஊர்களாலும் பிரதேசங்களாலும் அந்நியமானவர்களாக இங்கு வந்திருந்தோம் இன்று ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகள் போல் இங்கு ஒன்றாக வாழுகின்றோம் இது போற்றத்தக்கதொன்றே.
ஒன்றாக வேண்டும் பிரிவை நீக்கவேண்டும்.
இத்தனைகாலமாக வெள்ளைக்காரர்களிடம் கற்றுக்கொண்டது பொறுமையும் பிணக்கில்லாமல் வாழ்வதும் எப்படி என்றே..!
நண்பர்களுடன் இனியவார்த்தைகளை பரிமாறுதல் நல்ல சினேகிதம் நீடிக்க வழிவகுக்கும் விடுத்து தூசிப்பதை வாடிக்கையாக்கினால் வீணான வம்புகள் வளரும்.
நாங்கள் எங்கள் ஊரிலே பெரிய ஆள்களாக இருந்தோம் ஆகா ஓகோ என்று வீணான பெருமை பேசுதல் பண்பாகாது.
நல்ல மனிதர்களிடம் அவ்வாறான பேச்சுக்கள் பேசி தரத்தை குறைத்தல்அறிவாகாது என்பதனை அனுபவத்தால் உணரலாம்.
டென்மார்க்கில் எல்லோரும் சரி சமமே இதனை இத்தனை வருடங்களில் யாராவது அறிந்திருக்காவிடில் அறிந்திடுவீர்களாக.
நீ யார் என்று அரசு பார்க்கவில்லை உனது பிரச்சினை என்ன வென்றே பார்த்து அகதியாக ஏற்று உன்னை தனது நாட்டில் இருக்க விட்டது ஆதலால் இத்தனை வருடங்கள் எமது உயிர்களை காத்து தந்த டென்மார்க்நாட்டுக்கு நன்றி சொல்லுவோம்.
நாலு வேற்றினத்தவர்களுடன் பழகவேண்டும் அவர்களிடமிருக்கும் நல்லவற்றைப் படித்துக்கொள்ளவேண்டும் அவர்களுடன் கூடிக்களிக்கையில் சமத்துவம் பேணுதல் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
விட்டுக்கொடுத்து நாகரிகமாகப் பேசுவது எப்படியென்று அறிந்து கொள்ளலாம் அதன்காரணமாக எளிதில் மற்றவர்களுடன் நட்பாகப் பழக முடியும்,
நமது நாக்கை அடக்க அடக்க நம்மீது பிறர் விருப்பம் கொள்வார்கள் என்பது அறிந்து தெரிந்த உண்மை.
பொருளின்றி வாயாடுபவர்களிடம் நேர்மை கண்ணியம் ஒழுக்கம் வற்றியிருக்கும்.
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”(குறள் 127 )
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமெனில் பணம் மட்டும் போதாது மனம் வேண்டும் நல்ல குணம் வேண்டும்,
ஆடம்பரமாக விழா நடத்துவதனாலோ அன்றில் விலையுயர்ந்த வண்டிகள் வைத்திருப்பதனாலோ பெருமைகள் வராது.
இல்லார்க்கு உதவும் மனத்தாலும் கொடுக்கும் நல்ல குணத்தாலுமே
நல்ல மதிப்புள்ள மனிதர்களால் ஆன்றோர்கள் சான்றோர்களினால் மதிக்கப்படுவீர்கள் போற்றப்படுவீர்கள் அதுவே உண்மையான பெருமையாகும்.
நல்ல கலைஞர்களை ஆசிரியர்களை தமிழர்கள் இங்கு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியினை எல்லோருக்கும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்களின் பொறுமை கடமை என்றும் மதிக்கப்படுதல் வேண்டும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழூட்டி நடனம் பயிலவைத்து நமது கலைகள் கலாச்சாரங்களை அழியாமல் காக்கும் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டுதலுக்குரியவர்கள் அவர்களே கலாச்சார காவலர்களுமாகின்றார்கள்.
இரண்டு விதமான மொழி கலாச்சாரம் பண்பாடுகளுக்குள் மாறிமாறி நுழைந்து கொள்ளும் பிள்ளைகளின் மனோவியல் மிகவும் பாரமானதே.
பெற்றோரை திருப்பதிப்படுத்த அவர்கள் படும் கடுந்துன்பம் மிகவும் கடினம் இங்கிருக்கும் இலகு வாழ்வியலிலிருந்து கட்டுப்பாடுகள் நிறைந்த தமிழ் வாழ்வியல் கோட்டைக்குள் புகுந்து கொள்ள நிறையவே குனிதல் வேண்டும்.
இதனால் பிள்ளைகளுக்கு விளைவது நல்ல பயனே பெற்றோருக்கு பெருமிதமே.
நம்மிடம் நன்றாகப் பழகியவர்கள் நம்மை விட்டுச் செல்கையில் மனம் வெந்தது, போலிப்பேச்சினால் நடிப்பால் புழுகினால் ஏமாற்றுதல்களினால் பொல்லாத்தனம் புரிந்தவர்களால் அழுதோம் ,
எதிர்பாராமல் கிடைத்த உதவிகளால் வரவுகளால் மகிழ்ந்தோம், நல்ல மனிதர்களை சோதனையான காலத்தில் கண்டுகொண்டோம்.
பேரலையாலும் போரலையாலும் நம்மினம் அடிபட்டு செத்தபோது நாமிங்கிருந்து துடித்தோம் அழுதோம் அமைதியும் நிம்மதியும் உண்டாகிடும் வேளைகளில் வேதனைகள் நீங்கும் அந்த நல்ல
வேளைக்காக காத்திருக்கின்றோம்.
மொத்தத்தில் அழுகைபாதி சிரிப்புப்பாதி 25 வருட ஏதிலார் மண்ணில் இன்பமும் துன்பமும் கலந்ததே இவ்வுலகவாழ்வு அதிலிருந்து யாரும் தப்ப முடியாது .
ஆகையினால் குறுகிய இவ்வுலக வாழ்க்கையை மகிழ்ச்சியாக்க விரும்பின் மும்மலங்களை அகற்றி முடிந்தளவு எல்லோருக்கும் இன்முகம் காட்டுவோம் இனிமையாகப்பேசுவோம்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார், கொல்தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர் (குறள் 228 )
எழுத்தாக்கம்,
ம.இரமேசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக