செவ்வாய், 8 ஏப்ரல், 2014

ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் – நூலாய்வு றமேஸ் மணிவாசகம்

August 5, 2010
பெறுமதி என்பது நமது துணிவே என்று நூலால் முழக்கமிடுகின்றார். ஆழம் அறியாமல் காலை விடுவோர்க்கு நல்லதொரு எச்சரிக்கை மணி , ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல்
ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் என்ற நூல் தற்போது சகல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஈழமுரசு பத்திரிகை சென்ற மாதம் சிறப்பு விமர்சனம் எழுதியிருந்தது. சென்னை, திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களில் கூட இந்நூல் பரவலாக்கப்பட்டுள்ளது. அதுபோல உலகத்தின் பல நாடுகளிலும் இந்த நூல் பரவல் செய்யப்பட்டு வருகிறது. டென்மார்க்கிலும் சகல நகரங்களுக்கும் சிறப்பு வாசிப்பிற்காக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் சிறந்த தமிழ் ரசிகரும், தமிழ் ஆர்வலருமான ரமேஸ் மணிவாசகம் எழுதிய ஆய்வு இம்முறை இடம் பெறுகிறது. தமிழ் நேசம், தமிழ் திரைப்பட ரசனை என்று பல்துறை ஆற்றலாளராக தன்னை வளர்த்துவரும் றமேஸ் தற்போது டென்மார்க் பரடைசியா நகரில் வாழ்ந்து வருகிறார். அவர் அனுப்பியுள்ள நூலாய்வுக் கட்டுரை இங்கே இடம் பெறுகிறது.
முகமன் :
வணக்கம் என்ற சொல்லுக்கு எத்தனை வீரியம் உள்ளதோ அத்தனை வீரியத்தை நூலாசிரியரின் புன்முறுவலில் காணலாம் என்றால் அது புழுகில்லை. ( அவர்களை அடியேன் நேரில் காணும் பொழுதுகளில் )
சுவைதரும் பலாக்கனிகள் :
ஆழம் அறியாமல் காலை விடுவோர்க்கு நல்லதொரு எச்சரிக்கை மணி , ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் , என்ற நூல் என்றால் அது பொய்யில்லை.
படமெடுக்க எத்தனிக்கும் அன்பர்கள் படித்து கற்க வேண்டிய விடயங்களை நூல் அகப்படுத்தியுள்ளது. படமெடுத்து புண்பட்டவர்களை நூலாசிரியர் அங்கங்கே மன வெம்பலுடன் குறிப்பிட்டுள்ளார்.
இரசனையின் இராசாவாக தன் தந்தையார் வாழ்ந்ததை எண்ணி, வேடிக்கையாக நூலில் குறிப்பிட்டிருப்பது படித்து சுவைக்க பலாக்கனியாய் இனிக்கிறது. ( இரண்டாவது உலக மகாயுத்தத்தில் கொழும்பில் விமானங்கள் குண்டுவீச, உலகம் அழிந்தாலும் காரியமில்லை எனக்கு சினிமாவே முக்கியம் என்று குண்டு வீச்சுக்கு பயப்படாது படம் பார்க்கப் போன ஆசிரியரின் தந்தையின் சினிமா நேசம் )
அதுமட்டுமன்றி தனக்கு திரைப்படங்கள் தந்த பேரின்பங்களையும், பாலக வயதில் படங்களின் பத்திரிகை விளம்பரங்களை வைத்து அவற்றை பராவணம் செய்ததையும் ஒழிவு மறைவு இல்லாமல் பால் மனதுடன் நூலில் பகிர்ந்துள்ளமை ஆசிரியரின் கபடமில்லா மனதிற்கு எடுத்துக் காட்டாகிறது.
சுட்டிக் காட்டலும் நற்பண்பும் :
அன்றைய ஈழத்து அரசியலாளர்கள் ஈழத்தின் திரைப்படத்துறை வளர்ந்து வருவதை குறுகத் தறித்ததையும் ஆசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பெரும்பாலான தமிழர்களை திரைப்படங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன என்பது விடுபட முடியாத உண்மையே. ஆயினும் எத்தனைபேர் தங்களின் உணர்வுகளை உண்மையாக வெளிக்கொணருவார்கள் என்பது கேள்விக்குறியே.
தான் சார்ந்த உணர்வின் உண்மைகளை சொல்வதனால் எங்கே கேலிக்குரியவனாவேனோ என்கிற துணிச்சலின்மையே பலரையும் ஆக்கிரமித்துள்ளது என்பது நிசம். இங்குதான் நூலாசிரியர் கி.செ.துரை அவர்கள் முத்தைத் தாங்கும் சங்காகிறார். பெறுமதி என்பது நமது துணிவே என்று நூலால் முழக்கமிடுகின்றார்.
முயற்சி ஒன்றை மேற்கொண்டு முடிக்கும்வரை விழுங்கிவிடத் துடிக்கும் முதலைகளிடம் அகப்படாது முன்னேறி, நீச்சலடித்து முழுதாய் தன்னைக் காத்துக் கொண்ட செய்திகளையும் நூலில் விறுவிறுப்புடன் நகர்த்துகிறார்.
மனிதர்கள் தூங்கலாம் மாமனிதர்கள் தூங்குவதில்லை. ஆம் ! எடுத்துக் கொள்ளும் காரியங்களின்மேல் தாகம் அதிகமானால் அக்காரியத்தை முடித்து வெற்றி பெறுமட்டில் அயராதவர்களே மாமனிதர்களாவர். அதற்கு நூலாசிரியர் எப்படிப் பொருத்தமாகிறார் என்பதை நூலைப் படிக்கும்போது நாமுணரலாம்.
அலைகடல் அணைக்கும் அன்பு மக்கள் குடியிருக்கும் வண்ண மலர்களின் மடியில் புன்னகை பூக்கும், புயல்களை வெல்லும் பூமியாம் வல்வை மண்ணின் மைந்தர்களையும் அவர்களின் ஒத்துழைப்புக்களையும் நூல் நன்றியுடன் நினைவு கொள்கிறது.
போற்றியவர்களை போற்றியும், தூற்றியவர்களை தான் முன்னேற மன உரத்தைத் தந்தவர்களாக்கியும் மனதில் கொண்டு நூலில் வரவேற்கின்றார் நூலாசிரியர். என்னே உயர்ந்த பண்பு என்று வியந்து நிற்கின்றேன்.
இதுவரை படிக்காவிட்டால் உடன் படியுங்கள்.
றமேஸ் மணிவாசகம் – ( 75514964 ) பரடைசியா 05.08.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக