செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அந்தக்கால நினைவுகள் 

பச்சை வயல்கள் மீது  பச்சை கிளிகள்  பறந்து களித்தன  மண்ணிலே  காய்களும்  கனிகளும்  விளைந்து கிடந்தன  அக்காவும்  தங்கையும் அண்ணனும் தம்பியும்  அம்மாவும் அப்பாவும்  மாமாவும் மாமியும்  தாத்தாவும்  பாட்டியும்   உற்றாரும்  உறவினர்களும்  அமைதியாக 
அவரவர்  நிம்மதியுடன்  வாழ்ந்த  காலங்கள்  இரவு வந்தால்  திருவிழாக்கள்  நாடகங்கள்  இசைக்குழுக்கள்  வில்லுப்பாட்டு  சின்ன மேளம் 
என்று  தமிழர்களுடன்  கலைகள்  கைகோர்த்து  நடந்த காலம்  இடையிடையே  நிதியுதவிக்கான  காட்சி என்று  தூசு தட்டி  படங்கள்  காண்பிக்கப்பட்டது  அதுபோலவே  விளையாட்டு கழகங்கள்  சனசமூக நிலையங்களின்  நிதிக்காக  நாடகங்கள் நடத்தப்பட்டது 
கிட்டியடி, தாச்சி, மாபிளடி,கீத்தான் கட்டு,சுண்டிப்பொத்தல் ,  கைப்பந்தாட்டம் , துடுப்பாட்ட போட்டிகள் ,உதைபந்தாட்ட போட்டிகள்  சனிக்கிழமை வந்தால்  குடிகாரர்களின்  சண்டித்தன  கூவல்கள் என்று  கிராமம்  அல்லோல கல்லோலப்பட்டது 

நாற்பதை  தாண்டியவர்கள்  குழுமியிருந்து  இரசித்து  சீட்டு விளையாட  அதி  அக்கறையுடன்  அதை பார்த்தபடி  ஆட்டுக்கு  குழை குத்தும்  தொந்தி பெருத்தவர்கள் தோளிலே  ஒரு  துவாய் துண்டுடன்  நிற்க   இன்னொரு முற்றிவரும்  கூட்டம்   அரசியல்  சினிமா  என்று 
நிறையவே பேசியது  ஒருவன்  சைக்கிலில்  ஒரு காலை போட்டு மறு காலை தரையில் ஊன்றியபடி   சிரித்து  சிரித்து  பேசுவான்  திடீரென  ஒருவன்  உனக்கு  கனக்க தெரியுமே என கேட்க்க   மற்றவன்  ஏதோசொல்ல  ஒரு  சிறு  அடிபாடு  அதை  அருகில் நிற்பவர்கள்  பிடித்துவிட 
  இரண்டு  பாதையில்  கூட்டம் பிரிந்து செல்லும்  சில மாதங்களின்   பிறகு  இருவரும்  நேசமாகி  சிரித்து  பழகுவார்கள்  - செக்கல்  மீன்  வாங்கி வந்து  பால் சொதி  வைத்து பச்சையரிசியுடன்  சாப்பிட்ட  சுவைக்கு ஈடாக  எதை சொல்ல முடியும்  

நல்ல பண்பாடு நிறைந்த வாழ்க்கை  பெண்களை  கேலிசெய்வது  கிடையாது  காதல் செய்வதும்  குறைவு காரணம்  பயம்  மானம் மரியாதை என்ற பிரச்சினை  தடைகள் அதிகம்,  வேலை  ஒன்று நிரந்தரமாக கிடைத்தபிறகே  காதல் பற்றி  எண்ணங்கள்  எழுந்தது 
அதுவும்  பாதி,  மனதுடன்  கரைந்தது,  ஊருக்குள்   ஒன்று இரண்டு  பெண்களே  அழகிகளாக  இருந்தார்கள்  மற்றதெல்லாம்  சுமாருக்கும்  கீழேதான்    தங்களை  அழகு படுத்தவும்  அந்த பெண்களுக்கு  தெரிந்திருக்கவில்லை    பொருளாதாரமும்  பெரிதாக இருந்ததில்லை  செருப்பை அணிந்து  நடந்தது  ஒரு சில  பெண்களாகவே இருந்தது    அழகிய பெண்களை பார்த்து  கண்சிமிட்டவென்று தலை  மயிரை 
வளர்த்துக்கொண்டு  ஒரு சில  பெடியங்கள்  பக்கத்து  ஊர்களுக்கு  சைக்கிலில்  வட்டமடித்தார்கள்   அவர்களை  கொசப்புகள்  என்று 
ஒழுக்கசீலர்கள்  புறக்கணித்தார்கள்  காலத்தின்  ஓட்டத்தில்  அந்த  கொசப்புகள்  எங்கோ சென்று மறைந்தார்கள்  சவுதிக்கு  சிங்கப்பூருக்கு 
சென்று வந்த மாமாக்கள்  சித்தப்பாக்கள்  அவர்கள் தந்த  டிசேட்டுக்கள்  அந்தியெட்டி  கிரியை  செய்ய  வான்  பிடித்து  கீரிமலைக்கு 
சென்றது  அங்கே  கடலில்  குளித்துவிட்டு  குடிச்ச  தேநீரும் உண்ட வாய்ப்பனும் உற்றார் உறவினரின்  அன்பான   பேச்சுக்கள் 
 அரவணைப்புக்கள் மறக்க  முடியாத  கல்வெட்டுக்கள்  
  
ஈச்சங்காடு  குளதத்தடி  குலனை கோணாங்கேணி   என்று  கூட்டமாக  சுற்றி திரிந்தது மாங்காய் விழுத்தியது  நீந்தியது பயித்தங்காய் பிடிங்கியது  நொங்கு வெட்டியது  சண்டிலிப்பாய்  சீரணியம்மன்  கோவிலுக்கும்  சித்திரை வருடப்பிறப்புக்கு மானிப்பாய்  மருதடிக்கும்  வயல்களிநூடே  நடந்தது,  சிப்பிலி சுடலை  பால்கோப்பி, அதன்  சுவை,  ஆகா  அபாரம் 
 வரம்புக் கட்டு , மதவடி , வாசக சாலை , கேணியடி ,கோயிலடி  என்று  பெடியள்  தரித்து  கூடிப்பேசி  மகிழ்ந்தார்கள் , பால்க்கார  மணியம்,  கடைக்கார பாலு,  சோடாக்கடை  சிவமண்ணை , சீனத்தி கடை , டியூசன் வாத்தியார்  முருகப்பெருமான்  , சைக்கில் கடை  செட்டியாரப்பு ,கள்ள இளநீர்  இறக்கி குடித்து  குதூகலித்தோர் , குழப்படி  செய்து  கிழவிகளிடம்  திட்டு வாங்கியோர்  அப்பப்பா எத்தணை அழகிய அமைதியான காலம், இரவு  9:30  காட்சிக்கு  வெலிங்டனுக்கும்  வின்சருக்கும்    ராஜாவுக்கும் ராணிக்கும் கல்லுண்டாய் வெளியூடே  சைக்கிலில் சென்றார்கள்   
நெஞ்சிலே  எந்தப்  பயமுமில்லா  காலங்கள்  நிம்மதி  நிறைந்திருந்த  நேரங்கள்,  சன்னதிக்கும்   திருகேதீஸ்வரத்துக்கும்  சைக்கில்கள் சுழன்றது  நெஞ்சில்  உரமும்  உடலில்  பலமும்  எதையும்  சந்திக்கும்  துணிவும்  இருந்தது எதற்கும் ஒருவரும் பயப்படவில்லை  எல்லோரும்  நிம்மதியாக  வாழ்ந்தார்கள்  இனி  வருமா  அந்தக்காலம் ?

ஆக்கியது 
அன்புடன் 
ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக