செவ்வாய், 4 நவம்பர், 2014

காற்றினில்  கரைந்த  காலங்கள்
நீண்ட  வானாய் நினைவில் நீளுதே
நெஞ்சம்  சிலருக்கு மட்டும்
பழைய  நினைவில் துஞ்சுகிறதே

வஞ்சமில்லா அந்த வாழ்வில்
வந்து போன மனிதர்கள்
வட்டங்கட்டிக் கூடி இருந்து
வகை வகையாய் பேசி மகிழ்ந்த
 வடிவான  நண்பர்கள் எங்கே

பட்டந் தெளித்தான்
என்று  பகைத்து
கட்டிப்பிடித்து அடிபட்டு
பந்தடியில் ஒன்று கூடி
பின் இணைந்த சிநேகிதர்கள் எங்கே

செக்கல் மீன்  வாங்கி வந்து
சித்தப்பா சித்தி கையில் கொடுத்திடவே
பச்சையரிசி சோற்றுடன்
பால்ச்சொதி வைத்து முடிக்க
பாசத்துடன்  வந்தே  சித்தப்பா
நித்திரைப்பாயிலெனை 
தட்டியெழுப்பி
முகங் கழுவித்தே
முதற் கவளம்  சீத்திவிட
சுவை  பிடிபட்டு  சொந்தக்கையால்
சுடு சொதிக்குள்  கைவைத்து
ஆ  ஊ  என்று சுடச்சுட அள்ளிச்
சுவைத்து  மகிழ்ந்த காலம்
நினைவில் குழைகின்றதே

இங்குநானும்  செக்கல் செக்கலாய்
எங்கெல்லாமோ  ஏறி இறங்கி
என்னவெல்லாமோ  சுவைத்து விட்டேன்
அந்த ஆறுரூபா  மீனில் பால்ச் சொதி தந்த
சுவைக்கு  மேலாக மேதினியில்
 சுவையில்லையென்பேன்

சங்கானைச்  சாந்தியிலே
பாட்டும் பரதமும் பார்க்க
 பாசத்துடன் கூட்டிச் சென்று
இனித்திடவே சோடா வாங்கித்தந்து
படம் முடிந்து வீடு  நடக்க
சிவாஜி நடிப்பை  புகழ்ந்துகொண்டே
சித்தப்பா  வீறுநடை
போட்டதை  பொன்னாக
நினைவில் வைத்தேன்
போகிற போக்கில்
பொக்கிச நினைவுகளை
 மறக்க முடியவில்லையே

ம.இரமேசு .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக