சனி, 25 அக்டோபர், 2014

மறக்கவொண்ணா  நினைவுகள்

கொழும்பில்  வாழ்ந்த  5முதல் 10  வயதுக்காலங்கள்  -  சித்தப்பா  அவரை  சீயா  என்றே  அழைப்பது  எனது  வழமை  கண்களில்  காந்தமும்  சாந்தமும்  புன்னகை பூரிக்கும் முகமும் அகமும்  கொண்ட  இனியவர்  அவரின் அரவணைப்பில் வாழ்ந்த காலங்கள்  இனித்திட்ட  தேன் நாட்கள்  - பொரளையில் வைத்தியம் படித்துக்கொண்டிருந்தார்  -  அவரின் அறையில்  கூஜாவொன்று  மேசையின்  மேல்  எப்போதும் நீருடன்  இருக்கும்  அதைத் தூக்கி  தண்ணீர்  குடித்து விட்டால்  உலக சாதனை  செய்த  மகிழ்ச்சி  எனக்குள்  ஓடிவரும்  - "கொல்லான்  புலாலை மறுத்தானைக்  கைகூப்பி  எல்லா  உயிரும்  தொழும் " ஆம்  அவர்  மாமிசம்  உண்ணாதவர்  சுத்தமான   மரக்கறி  உணவாளர்.

விடுமுறை நாட்கள்  வருமுன்  என்னை  அழைத்துச்   செல்ல எங்கள் வீட்டுக்கு  வந்துவிடுவார்   சீயா வந்தால் எனக்கு வரும் மகிழ்ச்சி  அளவிட முடியாதது  கேட்காமல் இருக்கவே  சகலதும் வாங்கித்தருவார்  அந்த வயதில் பெரிதாக என்ன கேட்டுவிடப்போகின்றேன்  ஆயினும் ஒன்றும் கேட்பதில்லை அது அம்மா  சொல்லித்தந்த  பண்பாடு  -  கொம்பனித் தெருவிலிருந்த மரக்கறிச்   சாப்பாட்டுக்  கடைக்கு அழைத்து  செல்வார்  அங்கிருந்து   வரும் வாசம்  மேலுலகையும்  வெல்லும்   அப்படியொரு  வாசம் - இட்லி   தோசை   வடை  போண்டா போளி  என்று  வெள்ளித்தட்டில் வரும்  ஆகாரங்கள்  பார்வைக்கும்  அழகு  வாயில்  போட்டால்  ஆகா ஓகோ   அந்த மாதிரிச் சுவை   இனிமேல் எங்கு   கிடைக்குமோ  தெரியவில்லை   பல தடவைகள்   பாரிசில்  ஏறி இறங்கியும்   ம்கூம் .
 

ஒருமுறை  மாலைவேளை  கோல்பேஸ் (தங்கமுகக் கடற்கரை) அழைத்துச்  சென்றார்  பின்னர்  சபையரில் ஓடிய  குமரிப்பெண்   படத்தை  பார்க்க   அழைத்துச் சென்றிருந்தார்  நாகேஷ்  வரும் இடங்களில்  மகிழ்ந்து  சிரித்தது திரையரங்கு நானும்  சேர்ந்து கொண்டேன்  ஒன்றும் புரியாத வயது  நாகேசின்  உடல்மொழியினைக் கண்டு  சிரித்தேன்  அவ்வளவே - ஒருநாள்  ஒரு  டாக்சி (கட்டண  மகிழுந்து) ஒன்று  வந்தது சீயாவின் மருந்தகத்துக்கு (dispensary)  1975ம் ஆண்டின்     காலப்பகுதி  - என்னை  உடனடியாக  வெளிக்கிட்டு வரும்படி  கூறினார்  மகிழ்வுடன்  முதலாம் மாடியில்  வாசம்  செய்த  சீனியப்பா  வீட்டுக்கு  ஓடினேன் விடயத்தை  அம்மாவிடம் சொல்ல கால் மேல் கழுவி  தலை சீவி,    சீராக்கி  மடித்து வைத்திருந்த  சட்டைகளை  அம்மா  அணிவித்து  விட்டார்கள்  கீழே  துள்ளிக்குதித்து  ஓடினேன்   இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த  தங்கை விஜயா  (சீனியப்பா மகள் )  கீழே  அழுது கொண்டு  (குளறி) வந்து சீனியம்மாவின் கைப்பிடியில்  இருந்தபடி  குளறி துடித்து குதித்தாள்  தன்னையும்  டாக்சியில்  கூட்டிச்செல்லுமாறு - நான்  சீயாவுக்கு  பக்கத்தில் இருந்து   அம்மாவுக்கும்  சீனியம்மாவுக்கும் டாட்டா  காட்டியபடி   விஜயா   கூக்குரலிட்டு  அழுவதை  நோக்கினேன்  எனக்குள்  அந்தவயதுப் பெருமிதம் நிறைந்தது,   இன்று நினைக்கையில்  சிரிப்பாக  வருகின்றது  அந்தக் காட்சி.


கெப்பிட்டலில்   ராமன் தேடிய சீதை   ஓடிக்கொண்டிருந்தது  அதன் முன்னால்  டாக்சி  சென்றது
மருதானை  தாண்டி  எங்கோ  தூர  ஓடியது  டாக்சி,   நீண்ட  தொலைவின் பின்  அழகான  மருதநிலம்
அந்த  எழில் சூழ்ந்த  வீதியின் ஓரத்தில்  டாக்சி  நின்றது  எனக்கு  அந்த இடத்தின் அழகைக்  கண்டு வியப்பு ஏற்பட்டது - உழவர்கள் எருமைகளைக் கொண்டு   உழவு செய்துகொண்டிருந்தார்கள்,  அந்த வயற்காட்டின்  நடுவிலே  அழகான கூரை வீடு  வரம்பினூடே   அழைத்துச்  சென்றார் எங்களை  அழைத்து  வந்தவர் - முற்றத்தில்  படுத்துக்கிடந்த நாய்  வழமையான  நாய்களைப்  போல்  குலைக்க வில்லை   என்ன நினைத்ததோ  அமைதியாக   எழுந்து  சென்றுவிட்டது  அதுவும்  வைத்தியருக்கு  அம்மக்கள் போல்  இராஜ  மரியாதையை  கொடுத்திருக்கலாம் - அந்த அழகிய வீட்டின்  திண்ணையில்  போடப்பட்டிருந்த  நாற்காலியில்  என்னை  அமரச்சொன்னார்கள்  அமர்ந்தேன்   மல்லி   தே வத்துறு  பொண்ட (தம்பி தேநீர் பருகுங்கள்) என்று  அழகிய  கிளாசில் (பேணி ) அந்த வீட்டுக்காரர்  உபசரித்தார்    சீயாவைப் பார்த்தேன்  அவர் உள்ளுக்குள் படுத்திருந்த  நோயான  அம்மையாருக்கு  வைத்தியம் பார்ப்பதில்  முழுக்கவனத்துடன் ஈடுபட்டிருந்தார் - வைத்தியம்  முடிந்து  மீண்டும்  அதே  டாக்சியில்    வீடு  வந்தோம் -  இன்று நினைக்கையில்  ஆச்சரியம்  எப்படி அவ்வளவு  தூரத்தில்  இருந்த  அவர்களுக்கு  கொட்டாஞ்சேனையில் இருந்த சீயாவின் மகத்துவம் தெரிந்ததுவென்று -  யாரோ  வைத்தியம்  பார்த்து  நிறைவு  கண்ட சிங்கள  உறவினர்கள் சொல்லியிருக்கலாம் என்றே  நினைக்கின்றேன்  -  அந்த சிங்கள மக்களின்  பண்பாட்டை  நினைத்தால்  மிகுந்த மகிழ்ச்சி  எப்படியொரு  இராஜ மரியாதை  உபசரிப்பு   பண்பாடு  இப்படி வாழ்ந்த மக்களை  எப்படி  அரசியலாளர்கள்  கீரியும் பாம்புமாக்கி விட்டார்கள் - சீயா  இன்றும்  சகல இன மக்களின்  ஆதரவுடனும் மரியாதையுடனும்  வெற்றி நடை போடுகின்றார் .


ஒருநாள்  இரவு  சீயா வீட்டில்  உறங்கிக்கொண்டிருந்தேன்  வேறு சில உறவினர்களும்  உறங்கிக்கொண்டிருந்தார்கள்,  திடீரென  ஒரு  ஈனக்குரல் ஒலித்தது  டாக்டரையா  டாக்டரையா  
முன்  தோட்டத்தையொட்டி  படலை  இருந்தது  சீயா  எழுந்து லைட்டைப்   போட்டார்  நாங்களும்  எழுந்தோம்  கிட்டச்  சென்று  பார்த்தால்  ஒருவர்  மேற்சட்டையை  கழட்டிக் கையில்  வைத்தபடி  உடலெல்லாம்  கீறற்  காயங்களுடன்நின்றிருந்தார்  தனக்கு மருந்து  போடும்படி  அழுது வேண்டினார் - நீங்கள்  சண்டைபிடித்ததனால் வந்த காயம்போல் தெரிகின்றது  போலீஸ் (காவற்றுறை)  சான்றிதழ்  இன்றி  வைத்தியம் செய்வது  சட்டப்படி தவறு  குற்றமென்றார்  சீயா - ஐயா  அதை நாளைக்கு வேண்டி வருகின்றேன்  தயவுசெய்து மருந்து போடுங்கள் என்று  உருகி வேண்டியதற்கிணங்க  மருத்துவம்  பார்க்கப்பட்டதுஅந்த மனிதர் ஒரு  தொழிலாளி  எங்கோ  எதற்கோ  சண்டை  செய்து  எதிரிகளால் 
பிளேட்டால்  கீறப்பட்டு  நொந்து  வந்தார் என்பது  கிடைத்த செய்தி.

 ( இன்னும் வரும்)

ம.இரமேசு 


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக