ஞாயிறு, 26 அக்டோபர், 2014


இது பூத்திருந்தும்  வாசமில்லா மலர்வாழ்வு



காரோடும் வீதியெல்லாம்  தமிழன்  தேரோட்டி 
கார்காலப்பொழுதினிலும் கண்ணயராது கையாட்டி
சேர்ந்து வந்த துன்பமெலாம் உழைப்பால்  பேயோட்டி
கரை சேராதா ஓடமாகி வாழ்கின்றான்

பூவோடு பொட்டிட்டு  புன்னகைத்த பூவையரும்
காரோடிக் காசுழைக்க  வீதியிலே  இறங்கிவிட்டார்
யாரோடும் பேதமில்லை  ஊரோடு  ஒத்துழைத்தே 
உன்னதமாய்  உயர்ந்து நின்றே உலைவின்றி  வாழ்கின்றார்   

தாயோடும்  தந்தை சேயோடும்  தம்பியர்  உறவினர்
என்றிருந்த  காலம்  போய்  தனியாக  வாழுமொரு
தீயாகச்  சுடும் வாழ்விங்கு   சிலருக்கு
இது பூத்திருந்தும்  வாசமில்லா மலர்வாழ்வு

காத்திருந்து காத்திருந்து  கலியாணங் கட்டியவன்
நேற்று வந்தவளால்  தாய் நேசம்  மறந்தானே
பூ வாசம்  சில  காலத்தில்  ஓய்ந்த பின்னே 
வணங்கிடுவான்   தாயென்னும் ஆலயத்தை

அழுக்காறு  நெஞ்சத்தில்  பொங்கிவர 
ஆகாசம்  பார்க்கின்றார்  போத்துடனே
பெருஞ் செல்வம்  பேதமையால்  தொலைத்திட்டே
பெருந் தொல்லை  கொண்டே தான் வாழ்கின்றார்

ஊழினை  மேதினியில் யார் தடுப்பார்  ஆனாலும் உஞற்றிவிடு
உனக்கும் ஒரு காலம்  வரும்  உள்ளத்து  அல் தன்னை 
ஓட்டிவிடு  நெஞ்சமெனும் நெய்தலிலே   நீந்தி  நீயும்
பஞ்சமெனும் ஆழத்தில் அமிழ்ந்திடாதே

ம.இரமேசு
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக