ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

தபால்


தபால்

என் வீட்டு  முற்றத்தின் பனையே நலமா
நான் இங்கு நலமே
என் வீட்டின்  அருநெல்லி மரமே  எப்படியிருக்கின்றாய்
நான்  இங்கு  சுகமே
என் வீட்டு பூவரசே  சுகமாய் இருக்கின்றாயா
நான் இங்கு சுகமே 
என்  வீட்டு கிளுவையே எப்படியிருக்கின்றாய்
பக்கத்தில்  உனது நண்பர்கள்   அன்னமுன்னா
வாதனாராணி முருங்கை விளாத்தி எல்லோரும்
எப்படியிருக்கின்றார்கள்  எல்லோரையும்
நலங் கேட்டதாகக்  கூறவும்
தனித்து நின்று இனிக்கும் பழங்கள் தந்த
என் வீட்டு கொட்டங்காய் மரமே  சௌக்கியமா
என் அன்பான கிணறே நலந்தானே
உங்களையெல்லாம் விட்டுவிட்டு
வெளிநாடு  வந்ததில்  வருத்தமே
உங்கள்  அன்பை நீங்கள் செய்த உதவிகளை
நான் மறக்க மாட்டேன் 
பூவரசே  உன்  தியாகத்துக்கு  இணையில்லை
என்  மாமா  காங்கேசன்துறை  சீமெந்து ஆலையில்
வேலை செய்யும் போது கரண்ட்  அடித்து இறந்தார்
நீதானே அவரின்  நெஞ்சாங் கட்டைக்கு  எரிய
உன்னை  அழித்து  சுடலை சென்றாய்  தியாகத் திருவுருவே
உன்னை வணங்குகின்றேன்
பனையே  பனையே கோபம்  வேண்டாம்  உன்னை
குறைத்து மதிப்பிட முடியுமா   நீயும்  தியாகியே
வாழும் போதும் நிறையவே   தருகின்றாய்  இறந்தும்
எம்மை  காக்க  கூரையாய்  நிற்கின்றாய்  மறக்க முடியுமா
உன்  சேவையை 
என் அன்பான  மரங்களே  நீங்கள்  தந்த  பயனை மறவேன்
மனிதர்  செய்ய மாட்டா  உதவிகளை  செய்து  உயிர்காத்தீர்கள்
முருங்கையும்  வாதனாராணியும் எங்கள்  உணவாகி  உயிர் காத்தவையே
எல்லோருக்கும்  நன்றி  நலமுடன் இருங்கள்  அடுத்த  தபாலில் 
அன்பை  நனைப்போம்  - நன்றி வணக்கம் .

இப்படிக்கு
ம.இரமேசு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக