திங்கள், 18 ஆகஸ்ட், 2014

துப்புரவுப்பணி  மேலான  சேவைகளில் ஒன்றே

துப்புரவுப்பணியின்  இன்றியமையாமையை  சரியாக புரியாதவர்களே அதை  கேவலமாகக்   கருதுபவர்கள். ஒருவர் நோயில்  வீழ்ந்திருக்கையில்,  கழிவுகளை  அள்ளி சுத்தப்படுத்த ஆளில்லாவிடில் 
 துப்புரவுப்பணியின் மகத்துவம் எவ்வளவு  அவசியம் என்பதை உணர்வார். துப்புரவுப்பணி  செய்வோர்
அப்பணியை  செய்ய மறுத்தால் உலகே  நோய்வந்து மடியும்.  கல்வியறிவு உடைய அரச அதிகாரங்களில் இருப்போர்  அப்பணியினை  செய்வோருக்கு  சீருடைகள்  காலணிகள்  கையுறைகளை
கொடுத்து புதிய  கருவிகளையும்  வழங்கி வழிமுறைகளை சொல்லி கொடுத்தால் மிகவும் நல்லதாகும்.  தகுந்த  ஊதியமும்   வழங்கினால்  அவர்கள்  மேலான  வாழ்வை  வாழலாம்.

இங்கு (டென்மார்க்) 20 ஆண்டுகள் முன்பு  ஒரு  மீனுணவுகள் தயாரிக்கும்  நிறுவனமொன்றில்  பணிபுரிந்தேன்  அவ்வமயம்  துப்புரவுப் பணிக்கு  வரும்  ஒரு அழகியை  பார்த்து  ஆடவர்கள்  வாய்
வழிந்தார்கள்  இங்கே  அப்பணியை  செய்பவரை  ஒதுக்குவதுமில்லை  ஒதுங்குவதுமில்லை  நம்  நாட்டிலேயே துப்புரவுப் பணியாளர்களை  அருவருப்புக்குரிய  சீவன்களாக  நினைக்கும்  அறிவற்ற  நினைப்பு   மனிதர்கள  நெஞ்சுக்குள் அட்டையாய்  ஊர்கின்றது.

  எவர் எவர்  அங்கு  துப்புரவுத் தொழில் செய்த மக்களை எள்ளி  நகைத்தார்களோ  அவர்கள்  இங்கு வந்து  அதே பணியை  செய்கின்றார்கள்  கேட்டால் ரெண்குயரிங் (சுத்தப்படுத்தல்) என்று டெனிஸில்  பெருமையாக சொல்லிக்கொள்கின்றார்கள்  பிறகு  எதற்கு  அங்கே  சுத்தம்  செய்பவர்களை  தீண்டத்தகாதவர்கள் என்று நடத்தினார்களோ???  இங்கே பணம்  அதிகம் தருவாதால்  அத்தொழிலை  மகிழ்வுடன்  செய்கின்றார்கள்   அங்கே  துப்புரவுப்பணி செய்வோருக்கு  ஊதியம்  மிக மிக
குறைவாகக் கொடுக்கப்படுகின்றது  அவர்கள் அன்றாட  தேவைகளை  நேர்த்தியாக நிவர்த்தி செய்ய முடியாது  இன்னல் பட்டார்கள், இன்றும்  படுகிறார்கள்,   அவர்கள்  இன்னல் படுவது   மாடி வீட்டு  மாப்பிள்ளைகளுக்கு  நகைப்பாக  இருந்தது அந்த மாப்பிள்ளைகளின்  பிள்ளைகளும் பேரன்களும்  இன்று வெளிநாடுகளில்   சுத்தம் செய்யும் தொழிலை   செய்கின்றார்கள்.  இப்போதாவது புரிந்து கொள்ளவேண்டும்   தொழிலில்  உயர்வு  தாழ்வு இல்லை என்று.  அங்கு  துப்புரவுத் தொழில் செய்தவர்களும்   காய்ச்சி மூட்டி  உண்டார்கள் அவர்கள்  கிருமி தொற்றி  இறந்தா போனார்கள் 
 இல்லையே நெடுங்காலம்  உயிருடன்  நல்லபடி வாழ்கின்றார்கள்  உட்கார்ந்து  உழைத்தவர்களே  சர்க்கரை நோய்கண்டும் பாரிசவாதம்கண்டும் ஆரோக்கியமிழந்து  அழுந்தினார்கள்   அழுந்துகின்றார்கள்  என்ற உண்மை  வெளிப்படை.

ஊதியத்தை போதியபடி  ஒரு மனிதன்  சிறப்பாக வாழ கொடுக்க வேண்டும்  அதை அரசு சட்டமாக்க வேண்டும் . தகுந்த   ஊதியம்  கொடுக்காது விட்டால்  எந்தத்  தொழில் செய்பவரும்  வறுமையில்  சிக்கி வாடுவார்.   அது  பொறியாளரோ  மருத்துவரோ   சட்டத்தரணியோ  துப்புரவாளரோ,  எவராயினும்
 நிறைவான  வருவாய் இன்றில் வறுமையில்  நாறுவரே  - நம்  நாடுகளில் நம்மவர்கள  படிப்பது  அதிக  ஊதியத்தை  எதிர்பார்த்தே தவிர  கற்ற கல்வியால்  ஊருக்கும்  நாட்டுக்கும் உலகுக்கும்  சேவை செய்ய வேண்டும் என்பதற்காக  அல்ல  என்பதை நடைமுறை வாழ்வியலில்   காணலாம்  எங்காவது ஒன்று இரண்டு பேர்  நியாப்படி நடக்கலாம் அது முழுமையாகாது. இனிவருங் காலங்களில்  அனைத்து  தொழில் செய்வோரையும் மதிக்கப்பழகுவோம்  தகுந்த ஊதியம்  கொடுக்க மனம் கொள்வோம்.
தொழிலாளர்களும் சுத்தம்பேணி  பண்புடன்  நடந்து கொள்ள வேண்டும்  அப்பொழுதே  மற்றவர்களினால்    மரியாதை  கிட்டும் என்ற  உண்மையையும்  நினைவுகொள்ளல் வேண்டும்.

ம.இரமேசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக