யோசிச்சு பாருங்கோ.
(யாழ் / பேச்சு வழக்கில் எழுத்து )
காதலையும் சோகத்தையும் அதையும் இதையும் எழுதி எழுதி என்ன கண்டன் முக்கியமான விசயத்தை எழுதுவமெண்டு எண்ணினன் அதாலை இதை எழுதுறன்
பல்கலைக்கழகம் போனவை லண்டனில அமெரிக்காவில பிரான்சில அவுஸ்ரேலியா கனடாவில படிச்சவை பெரிய அறிவாளியள் மேதாவியள் எண்டு எத்தினைபேர் எங்கண்டை ஆக்கள் உந்த உலகம் பூரா இருக்கின
ஆராவது அந்த மண்ணில போருக்கு பிறகு சொல்ல முடியாத வறுமையிலையும் நோயிலையும்
அல்லல் படுகிற சனத்துக்கு அவையள் ஒரு நல்ல நிலைக்கு வரும் வரைக்கும் ஒரு கொடுப்பனவை
மாதாமாதம் கொடுத்து தூக்கிவிடவேணுமெண்டு நினைச்சவையே , அதுக்கெண்டு ஒரு திடமான கழகத்தை அமைச்சு செய்ல்ப்பட்டவையே சும்மா ஹாசையும் ஹாவையும் ஹாட்டையும் போட்டு இங்கிலீசு கதைச்சாபோதுமே ? கொடுப்பனவுதான் வேண்டாம் ஒரு பெரிய பந்தலை போட்டு தென்னோலையாலையெண்டாலும், மூண்டு நேரம் கஞ்சியாவது காய்ச்சி ஊத்தினா
பிள்ளைகுட்டியோட பசியில துடிக்கிற சனங்கள் கொஞ்சம் தேறுங்களல்லே
எத்தினை கோயிலுகளுக்கு ஒண்டு சேந்து காசு குடுத்து பெரிய எழுப்பமா திருவிழா செய்து காசை கரியாக்கினை எங்கண்டை ஆக்கள் சும்மா பவர்காட்ட - அம்மாளும் முருகனும் பிள்ளையாரும் தேப்பனும் வந்து கேட்டவையே எங்களுக்கு எழுப்பமா திருவிழா செய்யுங்கோ எண்டு - அங்காலை
சனம் சோத்துக்கு தவிக்குது இஞ்சையும் ஊரிலையும் எழுப்ப திருவிழாக்கள் கொண்டாடினை
ஆருக்கு காட்டி பெருமைப்பட, உதிலை என்ன பெருமையிருக்குதெண்டு தெரியாமைத்தான் கேக்கிறன், எது இப்ப நாட்டில முக்கியமா செய்யக்கிடக்குதெண்டு கொஞ்சமும் ஓடி சிந்திக்கிறாங்களில்லையே, ஆடம்பரம் வீடியோ கமெரா புதுச்சீலை கார் பங்களா நகைநட்டு
எண்டே இன்னும் அற்பனுகளா அவக்கடையுதுகளே என்ர சனமெண்டு நினைக்கேக்குள்ளை
சரியா மனம் நோகுது இன்னும் அறிவு பக்குவத்துக்கு வராமல் அரைக் காட்டுமிராண்டியளா
இருக்கிறாங்களே .
அங்கையொண்டும் இஞ்சையொண்டுமா சில பேர் செய்யிற உதவியள் பாதிக்கப்பட்ட எல்லா சனத்துக்கும் கிடைக்குமெண்டு சொல்ல முடியாது பாருங்கோ,
இந்த வெள்ளைக்கார நாடுகள் எங்களை அகதியாக ஏற்றுக்கொள்ளிற பட்சத்திலை
எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் பாராமல் தங்கண்டை மக்களுக்கு கொடுக்கிறது போலையே எங்களுக்கும் கொடுப்பனவுகளை தந்தினை தன்ரை நாட்டில அகதியா வந்தவையளையும் ஒரேமாரி கவனிக்கவேணுமெண்டு நினைச்ச அவையளின்ர மனசுக்கு பூ போட்டு
கும்பிடவேணும். ஆனா எங்கடையள் சிலதுகள் ஏதாவது நல்லதா செய்தவுடனை எடுத்துக்காட்டா
சொல்லிற சொல்லுக்கு செருப்படி போட்டு சேத்ததல்லாத்தையும் பறிச்சுப் போட்டு உடுத்தின உடுப்போடை ஓடு நாயே எண்டு கலைக்கவேணும், பொறாமையில சொல்லேல்லை ஆத்திரத்திலை சொல்றன் .
வேறை நாட்டாக்கள் எங்கண்டை ஊரிலை வந்து
இப்பிடி சொன்னா நாங்கள் தாங்குவமே, என்ன சொல்லினை தெரியுமே "காகக் கூட்டுக்குள்ளை வந்து தாங்கள் குயிலாம் கூவினையாம் " உது ஒரு பண்பான கதையே நன்றி கெட்ட பேச்சல்லே ஆராவது ரான்சிலேட் பண்ணி அர்த்தத்தை இந்த நாட்டுக்காரங்களுக்கு சொன்னா என்ன ஆகுமெண்டு யோசிச்சு கதைக்கவேணும். உந்த நினைப்புக்குத்தான் அங்கையும் இஞ்சையுமா அலைஞ்சு அழுந்திறம் .
வெள்ளைக்காரன்ர பிளானுகளை பாத்து எங்கண்டை படிச்சதுகள் ஒண்டு கூடி கதைச்சு நல்லவிதமா
மக்களின்ர ஆதரவோடை பொதுவான கழகமொண்டை அமைச்சு செய்யவேண்டிய முக்கிய விசயமா நற்பணியை செய்யக்கூடாதே, இன்னொருத்தர் படுகிற வேதனையை போக்கிறதுக்கு அலுவல் பாக்கிறவரே உண்மையான அறிவாளி படிச்சவன் - படிச்ச படிப்புக்கு அதுதான் உயர்வு அதை விட்டுட்டு, ரையை கட்டிக்கொண்டு கொம்பனியளுக்கு சேவகம் செய்து கடைசியில பாரிசவாதம் வந்து சாகிறத்தாலை ஆருக்கு என்ன பிரயோசனம், கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ.
பசி வந்து மயங்கி ஒரு மனிசன் அழுது
துடிக்கிறதை கொஞ்சம் கற்பனை செய்து பாத்தால் எல்லாம் விளங்கும் - வாடிய பயிருகளை பாத்து
ஐயோ என்ரை சனமெல்லாம் சோறில்லாமல் சாகப்போகுதே எண்டு முந்தி வள்ளலார் எண்ட மனிசன் வாடினாராம் அதை படிச்சா மட்டும் போதுமே வாழ்க்கையில் படிச்சதின் படி வாழவேணும் சோதினைக்கு வாய்ப்பாடு செய்து எழுதி பாஸ் பண்ணுற படிப்பாலை எதுவித புகழும் வராது. யோசிச்சு பாருங்கோ.
ம.இரமேசு - தொன்மார்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக