அடுப்படி வேதம்
அழகிய வடிவு நெற்றியில் குங்குமம் சிரிக்கும்
வார்த்தையில் கனிவுமிருக்கும் கண்டிப்புமிருக்கும்
நெஞ்சில் கருணையிருக்கும் கைகள் பாதுகாக்கும்
அவள் பெயர் அம்மா அவள் அதிகம் இருப்பது
உயிரைக்காக்கும் சேவையில் ஆம் அடுப்படியில்
அதுவொன்றும் பழுதான இடமல்ல புனிதவிடம்
அவ்விடம் இன்றில் அரசனுமில்லை புலவனுமில்லை
நாடுகாக்கும் வீரர்களுமில்லை ஒன்றுமேயில்லை
அப்பு இஞ்சவா அம்மாவுக்கு தேங்காய் திருவித்தா
வெங்காயம் உரிச்சுத்தா என்று அன்புக் கட்டளையிடுவாள்
வார்த்தையை தட்டினால் அவளும் தட்டுவாள் தடியால்
சொல்வதை செய்தால் கேட்பதெல்லாம் தருவாள்
பாடுவாள் பண்பெல்லாம் சொல்லுவாள்
செய்ய வேண்டியது கூடாதது எல்லாம் அமைதியாக
சொல்லித்தரும் பட்டம் பெறாத விரிவுரையாளி அம்மா
ஒலைக்குடிசைக்குள்ளும் இருந்து நல்லது சொல்வாள்
ஓடுபோட்ட உயர்ந்த வீட்டிலிருந்தும் உபதேசிப்பாள்
பொய் சொல்லக் கூடாது என்பதே அவள் கற்றுத்தரும்
முதற்பாடம் பெரியோரை பணி இரண்டாம் பாடம்
திருடக்கூடாது மூன்றாம் பாடம் மேலும் மேலும்
புகையை ஊதி ஊதி புத்திக்கும் ஊதுவாள் நன்மையை
உன்னை தேடி வருபவர் யாராக இருந்தாலும் உபசரி
கோள் மூட்டக்கூடாது என்று உரக்கச் சொல்வாள்
பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை அழுத்தமாக
நெஞ்சில் பதிப்பாள் ஏழைகள் இல்லாதவர்கள் கேட்டால்
கொடுத்து உதவவேண்டும் என்பாள் மது அருந்தாதே
புகைக்காதே என்று முதலில் சொல்லுபவள் அம்மாவே
அவள் ஒரு அடுப்படி பல்கலைக்கழகம் என்றால்
மறுப்பவர்கள் எவரோ எவரோ .
ம.இரமேசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக